Saturday, October 5, 2013

எங்கிருக்கானோ என்னவன் . . .


 
தமிழனின் நிறம் கொண்டவன்
மறவனின் வீரம் நிறைந்தவன்
என்னைப்போல் எம்மொழியை நேசிப்பவன்
எவரிடத்தும் மனிதனாய் இருப்பவன் ...

விழிகளின் மொழி அறிந்தவன்
மழலையின் மனம் தெரிந்தவன்
கவிதைகளை வாசிக்கப் பிடித்தவன்
ஓவியத் தூரிகையை உணர முடிந்தவன் ...
 
இயற்கையை ரசிப்பவன்
தினமும் என்னை
காதலிப்பதாய்  இம்சிப்பவன் ...

வார்த்தைகளால் வசியம்
செய்யும் வஞ்சகன்
வழிச்சாலையைக் கடக்கையில்
என் கரங்களை கைக்கொள்பவன் ...

நண்பர்களை நேசிப்பவன்
உறவுகளை மதிப்பவன்
சொந்தங்களோடு வாழ்பவன்
எப்பொழுதும் என்னைத்
துணையாய்க் கொள்பவன் ...

அன்பில் ஆதாயம் தேடாதவன்
அரசியல் பேசுபவன்
அவ்வப்போது என்னை
பேசாமல் கொல்பவன் ...

தவறிழைத்தால் 
தலையில் கொட்டுபவன்
தீயோரை திருத்த முற்படுபவன்
தீது நன்றென பகுத்து சொல்பவன் ...

காய்ச்சலில் துயில்கையில்
கண்ணிசைக்காமல் கண்டிருப்பவன்
அன்னமிட்டபின் அமரச்சொல்லியே
அன்னையாய் எனக்கு பரிமாறுபவன் ...

அறுபது வயதிலும்
நீ அழகியடியென
கன்னங்கள் சிவக்க
வெக்கங்கள் பிறக்க
மெலிதாய் முத்தமிடுபவன் ... 
எங்கிருக்கானோ என்னவன் ..??.. 

நானும்  என்  எழுத்தாணியும்
சுப சத்யா ...
 

Wednesday, September 25, 2013

ஒரு முகக் காதல். . . .


தலை குனிந்தே வாழும்
இவள் இதோ ...
இவன் முகத்தை  மட்டுமே 
காண  நிமிர்கிறாள் …
இவன் போகும்  திசையெல்லாம்
பூவிழி  நோகாமல்  பார்த்திருக்கிறாள் ....
என்றாவது  இவன்  என்னை 
காண்பான் என  காத்திருக்கிறாள் ....

இவனோ பொது  சேவையில் 
மட்டுமே  புன்னகைக்கிறான் ...
ஒவ்வொரு  நாள்  பிரியும்போதும்
மறுநாள் காணும்
மலிவான மகிழ்ச்சியிலே
மண்ணை காண்கிறாள் ...

தொட முடியாத  தூரத்தில் 
இவன்  இருந்தாலும் 
தொடத்துடிக்கிறாள் ...
அணைக்க முடியாத அனலாய்
இவன்  இருந்தாலும் 
இவன் அன்பை மட்டுமே
எதிர்பார்க்கிறாள் ...

அழகில் அவளுக்கு
இணையுமில்லை ...
அன்பில் அவளுக்கு
நிகருமில்லை ...
மங்களத்தில் அவள்
மலிந்தவளுமில்லை ...
மன்னவன் நேசமே
அவள் காணும் எல்லை ...

ஆயினும்  ஏனோ ...???
இவள் காதலை
அந்த கல்நெஞ்சக்காரன் 
புரிந்துகொள்ளவே இல்லை ...
இவள் கன்னியத்தை
அந்த செந்நிறத்தான் 
தெரிந்து கொள்ளவும் இல்லை ...

உலகம் தொடங்கிய 
காலம் முதல் இன்று வரை
இவளின் ஊமைக்காதலை 
அவன் உணரவும் இல்லை ...

என் அழகுத் தோழியே 
சூரிய காந்தி ...
ஒருதலைக் காதலெல்லாம்
ஒரு வருடம் கூட நீண்டதில்லை
உன்னால் மட்டும்
எப்படி சாத்தியம்
யுகயுகமாய் காத்திருக்க ...


நாளையாவது உன் காதல் 
அந்த கதிரவனோடு
கைக்கோர்த்திடுமா என்றேன் ...

முகமலர்ச்சி கொண்டே
மெலிதாய்  பூவிதழ் விரிய
மெல்ல பேசினால் அவள் ...


ஆதவனின் அருகில் வாழ
அடம்பிடிக்கும் என் மனம் ...
பகலவன் பாசத்திற்க்காய்
பரிதவிக்கும் என் உயிர் ...
ஆயினும்
நாளை என்னவாகும்
ஆசைகள் அனைத்துமிழக்க
என்னை வேரோடு
வீழ்த்திடுவனோ இவ்விவசாயி ...

இவ்வொரு ஜென்மம் போனாலென்ன
ஏழு ஜென்மங்களும் கடந்தாலென்ன
எட்டாவது ஜென்மம் கொண்டாலும்
என்னவனின் கரங்கள் தீண்ட
காத்திருப்பேன் என்றாள் அவள்
...


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

Thursday, September 19, 2013

செந்தமிழ் நாடிது . . .


செந்தமிழ் நாடே..
எம் தமிழனின் வீடே..
தாய்மொழி மறந்தாய்..
தன் மானத்தையும் இழந்தாய்..
 
எப்படி இருந்தாய் தமிழா..
ஏன் இப்படி தடம்புரண்டாய்..
நெறியோடு வாழ்ந்தாய் தமிழா..
னோ தறிகெட்டு போனாய்..

உழவு செய்தோம்..
நெசவு செய்தோம்..
குயவர் கொண்டோம்..
கட்டிடக்கலைகளை கற்றோம்..
 
செங்கல் சூலை அமைத்தோம்..
சித்த மருத்துவத்திலும் சிறந்தோம்..

கம்பு சோளம் கேழ்வரகு..
பருத்தி நெல் மல்லிகை..
காய்கறி பழங்கள் பட்டுசேலை..
முத்து பவளம் உலோகமென..

கப்பல் கொண்டு

அலை கிழித்து
உலகம் வியக்க
வணிகம் செய்தோம்..

எத்தனை தொழில்கள் செய்தாய்
அத்தனையும் இழந்தாய் தமிழா 
அடிமையாய் வாழத்தான்
ஆசையும் கொண்டாயோ . . . ???
 

அறிவியல் வென்றோம்..
ஆடல் கலைகைகள் பல கொண்டோம்..
அறுசுவை உணவு உண்டோம்..
ஊனில் பாதி தானமும் செய்தோம்..

தற்காப்பு கலைகள் கொண்டோம்..
எண்ணிலடங்கா இலக்கியங்கள் பெற்றோம்..
வீரவிளையாட்டுகள் பயின்றோம்..
பார்போற்றும் பண்பாடு கொண்டோம்..
 
செழுமை நாட்டினிலே,
மதுரை மா நகரினிலே,
எப்புறமும் முழங்க,
சங்கத்தமிழ் வளர்த்தோம்..
 
தாலாட்டு முதல் ஒப்பாரி வரை,
இசையால் தானே
இணைந்திருந்தோம் ..
 
வந்தாரை வாழ வைத்தோம்..
யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்றோம்...

எடுத்துரைக்க எத்தனை
பெருமைகள் உண்டு
என் தாய்திரு நாட்டிற்க்கு..

அருமைத் தமிழா..
அந்நிய மோகத்தில்
உன் முகவரி இழந்தாயோ . . .???

குருதியில் கலந்த இனத்தை
கருவிலே கலைக்க முற்படுகிறாய்,
தமிழ் மண்ணை உண்டு வளர்ந்தும்
மரத்துப்போன நடைபினமாய்த்தானே
வாழ்ந்து மடிகிறாய் !...

நாக்கை வெட்டிக்கொண்டு
நாளை பேசவும் துடிக்கிறாய் !...

நஞ்சுண்டு நாளை
வாழவும் நினைக்கிறாய் !...


பெற்ற பிள்ளையே
தாயை மிதிப்பதோ . . .???
தமிழனே
தமிழை மறப்பதோ . . .???
 
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா . . .


நன்றி : - விக்ராந்த் & தரணி

Tuesday, September 10, 2013

முகமூடி மனிதர்கள் . . .



அம்பானி ஆக ஆசை கொள்வார்
அந்தி தினம் திண்ணையிலே
ஊன் உண்ட உவகையோடு
மந்தமாய் மடிந்திடுவார் . . .

அரசியல் சாக்கடை என்பார்
ஐந்து ஆண்டுக்களுக்கு ஒருமுறை
அக்கடையில் கிடைக்கும் இலவசங்களை
எடை பார்த்து குடைஓலையிடுவார் . . .

பட்டினியில் சாகும் பிள்ளைகள்
ஐயோ பாவம் என்பார்
அம்மா தாயே என்றால்
கவனமற்றார்போல் கடந்து செல்வார் . . .

சாதிகள் இல்லை என
சண்டைகளிடுவார் - அரசின்
சலுகைக்காகவும் வேலைக்காகவும்
சட்டை பையோடு சாதியை ஒழித்துக்கொள்வார் . . .

எதிர்பட்ட பெண்களையெல்லாம்
எச்சிலையோடும் ஒப்பிடுவார்
இவர் வீட்டு ஏந்திழையார்யெல்லாம்
பத்தினியின் குலமகள் என்பார் . . .

ஏன் இவை என
யோசிக்கும் முன்னே - இதுதான்
நானென முகத்திரையை
கிழித்துக்காட்டும் மனிதர்கள் . . .

முதுகெலும்புள்ள மனிதனுக்கு
முகம் ஒன்று உண்டாம்
அது முகமல்ல முகமூடி என
உணர்வது எப்பொது ... ???

நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா . . .

Monday, September 2, 2013

உழைப்பாளிகள்









ஒட்டிய வயிரும்
உடைந்தமுன் பல்லும்
கட்டித் தாரென கருத்த நிறமும்
கொண்ட எங்களிடம்
குடிசைகளே இல்லை..........
உழைத்த காசெல்லாம்
உணவிற்கே போதாத போது
கோவணத்தை அடகுவைத்தா
குடிசை கட்ட முடியும் ?

கொட்டிய மயிறும் குனித்த முதுகும்
வற்றிய குளமென வரண்ட கண்களும்
கொண்ட எங்களுக்கு
கவலைகள் ஏதுமில்லை....
வாங்கிய கடன்களே 
வரிசியில் நிற்கும் போது
கவலைகளை என்ன 
கந்துவட்டிக்கா வாங்க முடியும்?

வெற்றிமேல் வெறியும் வீழா மனமும்
மற்றவராயினும் வாழ்த்தும் குணமும்
கொண்ட எங்களுக்கு
கண்ணீரும் வருவதில்லை.....
உண்ட நீரெலாம் 
வியர்வையாய் வெளியில் வர
கண்ணீருக்கென தனியாக
தண்ணீர் பருகவா முடியும் ?
                                    
                                - ஏமாளி. http://yemali12.blogspot.in/


 

Monday, August 26, 2013

மாற்றுவோம் தமிழகத்தை ...

 
சாலைகள் எங்கும் மரணக்குழி - இங்கு
சாதியின் பெயரால் அரசியல்கள்
வேலைகள் இல்லா இளைஞர்படை - என்று
வெம்பி வெதும்புது தமிழ்நாடு,
 
சுயநலம் கயமை கையூட்டு - உடன்
சுரண்டலும் சேர்ந்தது அரசாங்கம்
பயமிலை என்ற சொல்கூட - இங்கு
பயனற்றுப் போனது மக்களுக்கு,
 
அரசியல் இங்கே தொழிலாச்சு - அது
ஆட்சி செய்பவர்கள் பணம்பார்க்க
தொழில்களில் எல்லாம் அரசியல்கள் - அது
தொழில் முனைவோரை பதம்பார்க்க,
 
பெற்று வளர்த்தவர்க் கிடமில்லை - என்று
புகுந்தகம் அனுப்பிடும் பிள்ளைகளும்
வெற்றி பெருவோம் எனச்சொல்லும் - இது
வேடிக்கையான தமிழ்நாடு,
 
இந்த நிலையை மாற்றிடவே
இறைவா எனக்கொரு வரம்கொடு நீ
மந்தநிலை கொண்ட மடமனிதர் - எல்லாம்
மாண்டிடவே நல்ல சாபம்கொடு,
 
உறுப்பறுத்தெறியும் தைரியமும் - எங்கும்
உண்மையே பேசிடும் உளத்துணிவும்
கருத்தொருமித்த நண்பர்களும் - கொடு
கட்டாயம் மாற்றுவோம் தமிழகத்தை.
- ஏமாளி - http://yemali12.blogspot.in/

Friday, August 23, 2013

அடிமையாய் நான் ...



உப்புசப்போடு சமைத்துப்போட
உள்ளாடைகளை உலர்த்திப்போட
உன் உறவுகளை
உள்ளம் நோகாமல் உபசரிக்க ...


அலசிய கூந்தலையும்
அள்ளி முடிய நேரமின்றி
பரட்டை தலையோடு உன் பெண் பிள்ளைக்கு
ரெட்டை சடை பின்னலிட . . .


நடுநிசியில் துயில்கொண்டு
கதிரவனோடு கண்விழிக்க
எதிர் வீட்டுப் பெண்களிடம்
என் கணவன் போல் வாராதென
உன் புகழ் பாடிட . . .


கூப்பிடும்போது புணர்ந்துகொள்ள
காதலுக்கோ காமத்துக்கோ
நீ பெற்ற பிள்ளைகளை
ஊர் போற்ற வளர்க்க . . .


அத்தனை ஆண்களுக்கும் தேவை
ஓர் அழகிய அடிமை
மனைவி என்ற பெயரில் . . .


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...